தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது என மாவட்டச் செயலாளர், அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தழிழர்களின் உரிமைகளைக் காக்கவும் தொடர்ந்து குரல் கொடுத்து, தமிழர் தம் வாழ்வு சிறக்க, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி இந்தியாவுக்கே முன் மாதிரியாக திராவிட மாடல் பொற்கால ஆட்சி புரிந்து வரும் தி.மு.க. தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் மார்ச் 1 ஆம் தேதி வருவதை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முழுவதும் கழக அமைப்புகள் மற்றும் சார்பு அணிகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், விளையாட்டுப் போட்டிகள், கழக சாதனை விளக்க சிறப்பு தெரு முனை பிரச்சார கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் நடத்தியும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட இருப்பதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான பி.கீதாஜீவன் அறிவித்திருக்கிறார்.
குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி காலை தூத்துக்குடி மாநகர தி.மு.க சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே காலை 9 மணிக்கு கேக் வெட்டுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், பகுதி, வார்டுகள் மற்றும் கிளைக்கழங்கள் தோறும் கழகத்தின் இருவண்ணக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சிகளும், மேலும் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் இருக்கின்ற முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அறுசுவை மதிய உணவுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
மேலும் அன்றைய தினம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்தல் நிகழ்வும், மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாநகரம் -60வது வார்டு மற்றும் 6 மணிக்கு 11 வது வார்டு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெறும்.
மறுநாள் மார்ச் 2ம் தேதி காலை 11மணிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்தல் நிகழ்வும், அதே நாளில் தூத்துக்குடி – திரேஸ்புரம் பகுதியில் உள்ள ஆக்சிலியம் பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமும் நடைபெற உள்ளது. அன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாநகரம் – 40வது வார்டு பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும். மார்ச் 4ம் தேதி மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாநகரம் – 6 மற்றும் 7வது வார்டு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களும் நடைபெற உள்ளன.
மேலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கைப்பந்து, கூடைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் மின்னொளி கபாடி போட்டிகளும், மாட்டுவண்டி எல்கைப் பந்தயமும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஹாக்கி போட்டியும் நடத்தப்பட்டு பங்கேற்பவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும், வெற்றி வெறுவோருக்கு ரொக்கப்பரிசு, கோப்பை உள்ளிட்ட சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
இது தவிர, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி மற்றும் பேரூர் என அனைத்து கழக அமைப்புகளிலும் தமிழ்நாடு முதலமைச்சர் – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி கழக முன்னணிப் பேச்சாளர்கள் உரையாற்றும் சிறப்பு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.